Sunday, January 8, 2017

!! வாழ்வோட்டம்!!


மாரத்தான் ஓட்டம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நானும் சில மாரத்தான் ஓட்டங்களைக் கடந்திருக்கிறேன். எனது வாழ்க்கையோடு அது எந்த வகையில் ஒத்துப்போகிறது என்று ஒரு சிறு பார்வை. அட்வைசெல்லாம் இல்லை. நம்பிப் படிக்கலாம்.

இனிய தொடக்கம்:

நல்ல பயிற்சிக்குப் பிறகு, ஓடத் துவங்கும் முன் அன்றைய சீதோஷண நிலை, மற்றும் கடக்கும் பாதை, தூரம் இதையெல்லாம் கருத்தில் கொண்டு உடையணிந்து செல்கிறோம். பிறகு ஓட்டத்திற்கு முன் Stretches செய்வது வழக்கம். அதாவது, ஓடும்பொழுது எந்தெந்தப் பாகங்களுக்குத் தேய்மானம் அதிகம் என்பதைக் கருத்தில் கொண்டு அவைகளுத் தகுந்தார்ப்போல அந்தப்பாகங்களை flexible ஆக மாற்றிக்கொள்ள சில பயற்சிகளை மேற்கொள்வோம். அதாவது, இன்று நான் யார் என்று தன்னிலை அறிந்து, எனது வாழ்க்கைப்பயணம் எப்படி இருக்கப்போகிறது என்று forecast செய்து அதற்கு தகுந்தாற்போல எனை நானே வளைத்துக்கொள்வது. உதாரணத்திற்கு, வருங்காலத்தில், எனது வாழ்க்கைத்தரம் எவ்வாறு அமைய வேண்டும் என்று யோசித்து, அதற்கேற்றாற்போல எனது படிப்பு, வாழ்க்கை முறை ஆகியனவற்றை வடிவமைத்தல்.

தன்னையறிந்தால்:

Pacer எனப்படுகிற expert மக்கள் நம்முடனே ஓடி வருவர். உதாரணத்திற்கு, 42 கிலோமீட்டரை நான் கடக்க வேண்டும். நம்மால் அது 6 மணிநேரத்தில் முடியுமா, 5 மணிநேரத்தில் முடியுமா, என்று நம்முடைய வேக சராசரியை நாமே கணக்கிட்டு, அவர்களோடு ஓடி வருவோமாயின் எல்லைக்கோட்டினை குறித்த நேரத்தில் தொட்டுவிட முடியும். அதற்கு தேவைப்படுவது, நிலையறிந்து முடிவெடுத்தல் என்கிற நற்குணமே. நம்முடைய காலத்தில், எல்லா கட்டத்திலும், குரு எனப்படுகிற ஆசான்கள், நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ நமக்கு உந்து சக்தியாக உடன் வந்துகொண்டே இருப்பர். யார் எனது குரு என்று முடிவெடுப்பதே என் வேலை. அதை சிறப்பாக செய்வேனாயின், முடிவும் சிறப்பாக அமைந்துவிடும். படிப்பு, வேலையில் கிடைக்கும் சான்றோரை இதற்கு உதாரணமாக ஒப்பிடலாம்.

ஓட ஆரம்பிக்கும்போது, நமக்கு முன்னால் உள்ளவர்கள் ஓடும்வரை காத்திருந்து, கூட்ட நெரிசலில், முதலில் நடக்க  ஆரம்பித்து, பிறகு பொறுமையாக வேகத்தைக்கூட்டி ஓடத்துவங்கவேண்டும். வாழ்விலும், நமக்கு முன் அடி எடுத்தோருக்கு வழிவிட்டு, பிறகே நாம் முன்னேற எத்தணித்தல் நலம். எடுத்த உடன் ஓடினால், இடித்து விழுவோமே தவிற, முன் செல்ல முடியாது.

வேகத்தைக்கூட்டுகிறோம் சரி, எடுத்த உடன் வேகமாக ஓடலாமா?? கூடவே கூடாது. ஏன் கூடாது. நமது உடல்நிலை நாமறிவோம். எனக்கே உண்டான வேகத்தை மனதில் கொண்டு அடிமேல் அடி எடுத்து , ஓடுகிற பாதையின் வடிவத்திற்கேற்றாற்போல ஓடத்தொடங்கும்போது, எனது வேகத்தை சீராகத்தொடர முடிகிறது. நடைமுறையிலும் "ஓவர் நைட் ஒபாமா" என்பது கண்டிப்பாக கனவே. இன்று நான் எந்நிலையில் உள்ளேனோ, அதையே சீராகச் சிறிது காலம் தொடர்ந்தே ஆகவேண்டிய சூழ்நிலை!! வேகமாக முன்னேறத் தோன்றினாலும், ஒரு கட்டத்தில் மூச்சிறைக்க நின்றே ஆகவேண்டும் என்கிற பயம், எனக்குள் இருக்குமேயானால், எனது பயணத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள, நல்ல foundationஐ அமைத்துக்கொள்வேன்.

யாதும் யாவரும்:

நாம் ஓடும்பொழுது, நம்முடன் பலரும் உடன்வருவர். சிலர் அவர்களது potentialக்கு ஏற்றவாரு வேகமாக நமைத் தாண்டிச் செல்வர், சிலர் பின்தங்குவர், முன்னே செல்பவரைத் தாண்ட நினைத்து திட்டமின்றி வேகமாக ஓடினால், தாக்குப்பிடிக்க முடியாமல் போய்விடலாம். பின்னால் வருவோர் கண்டு மெத்தனம் காட்டினால், நமது ஓட்ட நேரத்தை நாமே கூட்டிக் கொள்வோம். வாழ்விலும், தெரிந்தவர் தெரியாதவர் என்று யாராக இருப்பினும்,  எனது அடிகள் அளந்து செயல்படுவேனாயின் நான் கடக்க நினைத்த தூரத்தை இலகுவாக கடக்க முடியும்.

ஓடும்பொழுது குறிப்பிட்ட தூரங்களில், நம்மை refresh செய்துகொள்ள refreshment சென்டர்கள் அமைத்திருப்பர். தண்ணீர், வாழைப்பழம், ஆரஞ்சு, அங்கே வழங்கப்படும். கடக்கும் தூரம் அதிகம் என்று, அவை அனைத்தையும் தவிர்த்தேன் எனில், ஒரு கட்டத்தில் சுருண்டு விழுந்துவிட நேரிடும். அதை நண்பர்கள், மற்றும் குடும்பத்தினர் எனலாம். எனது வாழ்க்கை முன்னேற்றத்திற்காக இறைவனால் அனுப்பப்பட்ட உற்றாரை தவிர்த்து முன்னேற நினைத்தால்.. கண்டிப்பாக ஒரு கட்டத்தில் அந்த முன்னேற்றம் தடைபட்டே ஆகும். அவர்களுக்கென்று ஒதுக்கப்பட வேண்டிய நேரம், ஒதுக்கப்பட்டே அகவேண்டும். எப்படி, எவ்வளவு என்பது நமக்கு தெரிந்திருத்தால் வாழ்க்கை சுவர்க்கமே.

"ஊக்குவித்தால், பாக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்" என்றார் வாலி. ஓட்டத்தின்போது எனது குறிக்கோள் முடிவுக்கோடாக இருந்தாலும், உடன் ஓடி வருபவரை ஊக்குவித்துக் கொண்டே ஓடுவது வழக்கம். தேங்கி நின்றோர், எனது கைத்தட்டல் கேட்டு வேகமாக ஓடத்துவங்கலாம். நான் கைத்தட்டுவதைப் பார்த்து, இன்னொருவர் கைத்தட்டத் துவங்கலாம். அதனால் ஒரு கட்டத்தில், நான் மூச்சு வாங்கி நிற்கும்போது எனைத் தேற்றி விட இருகைகள் வரலாம். இதற்கு ஆரம்பம் நானே. பாராட்டைத் தாண்டி ஒரு உதவி இல்லை. வாழ்விலும், பல நேரங்களில் தேங்குபவனைத் தூக்கிவிடத் தேவையிருக்காது. "உன்னால் முடியும் நண்பா, இப்படித்தான் இருக்கும். கொஞ்சம் முயற்சி பண்ணு. ஜெயிச்சுடலாம்" என கைத்தட்டிக்கொண்டே ஓடுவேனாயின் "பூமராங்" போல, நானும் ஒரு கட்டத்தில் பலனடைவேன். அடைந்து கொண்டும் இருக்கிறேன்.

கோடிட்ட இடத்தை தாண்டி:

முடிவுக்கோட்டை தொட்டுவிட்டேன். மெடல் வாங்கிவிட்டேன். அப்படியே திரும்ப வீட்டிற்கு சென்றுவிடுவேனா? கண்டிப்பாக மாட்டேன். Post run stretches செய்தே ஆகவேண்டும். ஏன்? ஓடிய தேய்மானத்தில் உடற்பாகங்கள் ஆங்காங்கே பிடித்துக்கொண்டும், வலித்துக்கொண்டும் இருக்கும். அந்த நேரத்தில் அது தெரியாவிடிலும், கண்டிப்பாக மறுநாளோ அல்லது அந்த வாரத்திற்குள்ளோ, வேறு சில பெரிய பிரச்சனைகளை இழுத்துவிடலாம். ஏனென்றால் அடுத்த ஓட்டம் இன்னும் சிறிது காலத்தில் ஓடியாக வேண்டும். மனோரீதியாக, வலியைப் பிரதானமாக உணர்ந்தால், கண்டிப்பாக இனி ஓடவே கூடாது என்று எனக்குள் எண்ணம் வந்துவிடும். ஆனால் என் இலக்கு ஓடக்கொண்டே இருக்க வேண்டும் என்பதேயில்லையா?? , மாரத்தானுக்கு இலக்குண்டு. ஓட்டத்திற்கு இல்லை. எனது பணி என்னை நான் செதுக்கிக் கொள்வதே.

ஏன் வம்பு, பத்து நிமிடம் ஒதுக்கி, கை கால்களை நன்றாகச் அமுக்கிவிட்டு, தாஜா செய்து வலியைக் குறைத்தபின்னரே வீட்டிற்கு செல்வது சிறப்பு. இயல்பு வாழ்விலும், கனவுக்கு எல்லையுண்டு, முன்னேற்றத்திற்கு இல்லை. அடுத்த அடி எடுத்து வைக்கும் முன், கண்டிப்பாக சிறிது ஓய்வு தேவை. வார இறுதியில் விடுமுறை தினங்கள் அமைக்கப்பட்டதே அதற்குத்தானே. விடுப்புதான் எடுப்போமே!! உழைத்துக்கொண்டே இருக்கவா உருவமெடுத்திருக்கிறோம்? வாழத்தானே வாழ்க்கை.!!

மாரத்தான் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது. மாரத்தான் ஓடினால்தான் இது புரியும் என்பதில்லை. உலகில் அனைவருமே ஓடிக்கொண்டுதான் இருக்கின்றோம்.
" அனுபவித்து வாழுங்கள், நாட்களைக் கடத்தாதீர்கள்"  என்பதே சாராம்சம். !!

வாழ்க வளமுடன்.

குருப்ரம்மா

No comments:

Post a Comment