புத்தர் பற்றிய ஒரு கட்டுரையினைப் படிக்க நேர்ந்தது. படித்தவுடன், புத்தரின் மேல் இத்தனை நாள் கொண்டிருந்த நன்மதிப்பு சற்று நசுங்குபடவே செய்திருந்தது. புத்தர் இல்லாமல் போயிருந்தால் வரலாற்றில் எந்தவித பெரிய பாதிப்பும் இருந்திருக்கப் போவதில்லை. திருமணம் ஆகியிருக்காத எவ்வளவோ புத்தர்கள் தோன்றியிருப்பர். யாருக்கும் எந்த பாதிப்புமின்றி அவர்கள் பௌத்த சந்நியாசத்தை ஏற்றிருப்பர். ஆனால் ஏன் புத்தர் ஏற்றார்? ஏன் அவர் தனது மனைவியான யசோதராவை விட்டுச் சென்றார். அவரது மகனான ராகுலன் நிலை என்னவாகியிருக்கக் கூடும். கணவனை இழந்து அத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் ஆண்களின் வன் ஆண்மையிடத்துத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள தன் முடியை மழித்து சந்நியாசியைப்போல தன்னை காண்பித்துக்கொண்ட அந்தப் பெண் புத்தரை விட உயர்ந்து நின்றாள்!! வாழ்க யசோதரா புகழ்!!
அத்தனைக் கோடி ஆண்களிருக்க அந்தப் பாழாய்ப்போன போதிமரம் புத்தரை ஏன் ஆட்கொண்டது. பிறவியிற் துறவியுமில்லை, அரசிளங்குமரன் சித்தார்த்தன். பிறகேன் இந்தப் பட்சாதாபமற்றத் துறவறம் புத்தருக்கு. ஞானவித்து தேடிவந்து புத்தரின் சிந்தைக்குள் புதைந்து ஏன் தன்னைத்தானே விருட்சமாக்கிக் கொண்டது. விதி😡😡
இன்று , அருகிலிருக்கும் காபி ஆரிப்போவதும் தெரியாமல், கையில் மொபைலைப்பிடித்தபடி, அலையும் ஆயிரங்கோடி ஆண்களைக் கொண்ட பெண்களின் கதறல், யசோதராவை கண்முன் நிறுத்திச் செல்கிறது. புத்தனாவது புனிதம் பூண்டான். இன்றோருக்கு பொழுதுபோக்கே பௌத்தம் ஆகிப்போகிறது. அருகிலிருந்தவளை, அணைக்க வந்த குழந்தைதனை, உற்சாகப்படுத்தும் ஆயிரமாயிரம் உறவுகள், இப்படி மொபைல் இருட்டில் மூழ்கிப்போன மக்கட்தொகையோ வானளவு. ஏனிப்படி என்று கேட்டுப்பாருங்களேன், வேலையென்பர், தலையெழுத்தென்பர், இதுவே இனி வாழ்க்கை முறை, நீயும் வாழப்பழகு என்பர். வஞ்சகர்கள்!! கொண்டவளையும், குடும்பத்தையும் பற்றி அகத்தில் ஆயிரம் சிந்தனைகள் ஓடியபோதும், வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் திரியும் ஆணினம், இந்த அலைப்பேசிச் சூட்டினில் ,தான் தொலைத்த பொழுதுகளை எண்ணி என்றாவது ஒருநாள் ஏங்கிச்சாகும்.
இப்படியெல்லாம் எழுத எனக்கும் ஆசைதான். இதோடு இனி வரப்போகும் பாகத்தையும் சேர்த்துச்சொல்ல ஆசை!! 😇😇
மனைவிமார்கள் ஒன்றினைப் புரிந்து கொள்ளவேண்டும். அன்றிருந்த ஓர் போதிமரமே ஒரு ராஜ்ஜியத்தை ஆட்டியிருக்கிறது. இன்று திகட்டத் திகட்டக் கிடைக்கும் மீதி மரங்களான , அள்ள அள்ளக்குறையாத டேட்டா , வைஃபை கிடைக்கப்பெற்ற நாங்கள் என்ன செய்வோம்? இப்படித்தானே இருப்போம். தினமும் கற்கிறோம். நல்லது சில படிக்கவும், படைக்கவும் செய்கிறோம். அதையும் கவனிப்பீர் தோழிமார்களே!! அதற்குக் கொடுக்கப்படுகிற விலையின் பாதிப்பு உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் இழப்பே!!
திருமணத்திற்குப்பிறகு , நீங்கள் புக புதுக்குடி அமைத்துத்தர, படிப்பைத் தொடர, புதுப்பணி அமர, என்ற எல்லாப்பணிகளிலும் தோள்நிற்கும் ஆணினத்தை, சட்டென்று மொபைல் பைத்தியங்கள் என்று கூவலிட்டு ஓரங்கட்ட எப்படி மனம் ஒப்புகிறதோ!! எனது வேலைகளைப் பார்த்துக்கொண்டே படித்தேன் என்று மல்லுக்கு நின்றீர்கள் என்றால், இப்பொழுதும் நாங்கள் எங்கள் பணிகளை செய்து முடிப்பதில்லையா. !!
எந்தமேடை கண்டபோதும், எனை ஏற்றிய பெரும்பங்கு என் மனைவிக்கும் உண்டு என்று தனது துணைவியை முன்னிருத்திப் பேசும் கணவர்களும் இங்குண்டு. அடுத்த தலைமுறையினருக்கு தனக்குக் கிடைக்காத அறிவும் ஞானமும் கிடைக்கவேண்டும் என்று, ஏகப்பட்ட துறைகளில் தனது அறிவினை வளர்த்துக் கொள்ளத் துடிப்புடன் செயல்படும் ஆண்கள் இன்று அதிகம்.ஆங்கிலத்தில் Versatility என்பர். எங்களிடம், என்ன வேண்டும் கேளுங்கள் செய்கிறோம். அதை எப்படிச் செய்வது என்பதைச் சொல்லுங்கள் பரவாயில்லை. மொபைலை முன்னிருத்தி அதை ஒழித்தால்தான் உருப்படும் என்ற கருத்து சரியானதாகத் தோன்றவில்லை!!
கேவலம் லைக்குகளுக்காக நேரங்கழிக்கும் கூட்டத்தினரோடு எங்களையும் சேர்த்துப் பேசுவது தவறல்லவா!! லட்சியங்களும் உண்டு எங்களுக்கு என்பதையும் அறிக!!
எத்தனை சண்டைகள் வந்தபோதும், தன் மனைவி இவ்வளவுதான் என்று வெளியில் புலம்பாத கணவர்களின் மதிப்பினை, தன் தோழமைக் கூட்டங்களில் "அவர் கைல எப்போப்பாரு மொபைல்" என்ற ஒரே வாக்கியத்தில் அடித்து நொறுக்கிவிடுகிறீர்களே நியாயமா!! டைம் டேபிள் போட்டு குடும்பத்தோடு அன்பு போற்றும்படி ஆக்கிவிடாதீர்கள். சீக்கிரமே கசந்துவிடும் . நேரம்வரும்போது, உங்களை ஏந்துவோம் உள்ளங்கைகளில். அதுவரை பொறுத்தாள்க!!
- குருப்ரம்மா -