அடர்ந்த இருட்டினுள்,
படர்ந்த காதலின் முடிவில்,
என் செங்குருதியது சுண்டி,
வெண்துளிகளாய் வெடித்துக்கிளம்பி,
திரைவிலக்கித் திரும்பாமல் நீந்தி,
கோடியணுக்களில் முந்தியது,
முத்தாகத்துடித்து முட்டையினுள் புகுந்து,
அது பொட்டாகி, மொட்டாகி,
கனியாக மெருகேறியதினம்,
ஆசையாய் அழைத்து,
அத்தான் உதைக்கிறதென்றாள் அன்பு மனைவி!!
வளராமழலை மொழி கேட்கநான்,
வளர்ந்த அவள் வயிற்றில் செவி வைக்க,
உப்பிய பானையினுள் வரும்,
ஓமென்ற ப்ரணவம்போல்,
தொப்புளின் வழிவந்த,
ஓசை தெரிந்ததென் பிரமையோ!!
வளரும் பிஞ்சை வதைக்காதிருக்க,
வளர்ந்து பெருத்த உடலதைக்குறுக்கி,
ஒருக்கழித்தே உறங்கிக்கிடந்தாள்,
ஓங்கிச்சீறிய பத்தினியவள்..!!
ஈரிருபதுவாரம் தாண்டி,
அத்துனைக் கடவுளரையும் துணை வேண்டி,
தூங்கிய தருணமதில்,
துடித்துக்கத்தினாள்,
தூக்கிவாரிப்போட்டதெனக்கு..!!
மனையவள்தனை ஏற்றி,
மருத்துவமனை நோக்கி,
மகிழ்வுந்தில் சீரியநேரமவளென்
கைகளதை அழுத்த உடைந்ததென் எலும்புகள்!!
சென்று சேர்ந்த எங்களை,
வந்துகேட்ட மனிதர்கள்,
தள்ளிச்சென்றனர் அவளை!!
என்றாலும் ,
என்கை பற்றி இரு கண்ணோக்கி,
என் மங்கல மங்கையவள்,
சொல்லிச்சென்றாள் கலங்காதே என்று!!
முதல் நாள் பள்ளியில்,
விடப்பட்ட குழந்தைபோல்,
அன்னையுமானவள் போன தடம் பார்த்து,
அயர்ந்து கலங்கி நின்றேன் நான்!!
உயர்ந்து கதறிய அவள் சத்தமென்,
உதிரச்சூடுதனைக் கூட்ட,
உட்காரத்தோன்றாமல் திரிந்தேன்,
உள்ளத்தவிப்பினை அடக்க.!!
கொதித்த ரத்தம் வெடிக்கும் தருவில்,
அலறிய சத்தம் அமைதியான நேரம்,
திறவாக்கதவினை திகைத்து நோக்கி,
திக்கிட்டுநின்ற என் கொதிப்படங்க,
வெளிப்பட்டாள் பெண்ணொருத்தி,
வெள்ளையாடைதனையுடுத்தி!!
வியர்வையால் வெளிறியமுகம் கொண்டு,
என்னசொல்வாள் என்று கலங்கி நிற்க,
சிரித்து நின்ற செவிலியவள்,
சொல்லிச்சென்றாள் "பெண்ணென்று"!!
கூக்குரலிட்டு குதூகலிக்கத்துடித்தும்,
அடக்கியது மருத்துவமனை நிசப்தம்..
அடக்கிய சத்தம் வெப்பமாகி,
நரம்புவழி கண்களுக்கேறி,
முட்டிநின்ற துளிகள் தள்ள,
ஆணாகினும் அழுதேன் அன்று!!
அழுகைச்சத்தம் அருகில் கேட்க,
இமைதுடைத்து நான் ஏறிப்பார்க்க,
வந்து சேர்ந்தாள் வைரக்குவியலாய்,
என்கைகளுக்கு தங்கப்புதையலாய்..
கைக்கு வந்த தங்கமகளை,
உச்சி முகர்ந்து உளம் பூரித்து,
சட்டென நினைவு வந்தவனாய்,
அறைக்குள் ஓடி அசந்து நின்றேன்,
என்னவள் கண்டு.!!
புதிதாய்த் தாயானவள்,
புதுமலர்தனைத்தந்தவள்,
அசந்துகிடந்தாள் சாதித்து முடித்து!!
அருகினில் அமர்ந்து,
அவளழுகைத்துடைத்து,
ஆரத்தழுவி,
அவள் தலை கோதிய நேரம்,
அன்று பிறந்தோம்
அப்பா அம்மாவாக.!
வண்ணமகள் வளரக்கண்டு,
எண்ணிலடங்கா எண்ணம்கொண்டு,
எட்டுவைக்கும் அடிகளுக்கெல்லாம்,
பாதம்நோகாப் பட்டுவிரி நெய்து,
தட்டுநிறை சோறு தந்து,
மொட்டுமலரக்காணும் இந்தநொடி,
தேடி நின்ற வாழ்வின்
வினைப்பயன் கிடைத்தது!!
மகளிர்க்கு சமர்ப்பணம்..!!
- குருப்ரம்மா -